கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுமி பலி

breaking
  புத்தளம் கற்பிட்டி அம்மா தோட்டம் 31 வது கட்டை பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற வாகன விபத்தில் பள்ளிவாசல்துறை, முசல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா றுஸ்னா என்ற 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் சென்று கொண்டிருந்த குறித்த சிறுமி மற்றும் சிறுமியின் சின்னம்மா மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுமியும், பெண்ணும் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் அங்கிருந்தவர்களால் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், விபத்தில் காயமடைந்த பெண்ணும், மோட்டார் சைக்கிள் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.