ஊசியையும் ஆயுதம் என அலாரம் அடித்த ஸ்கானர் நல்லூரில் விநோதம்!

breaking
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக பொருத்தப்பட்ட புதிய ஸ்கானர் இயந்திரங்கள் அகற்றப்பட்டன. குறித்த இயந்திரம் நகைகள், ஊசிகள் என சிறு உலோகங்களுக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்புவதனால் அவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை அகற்றப்பட்டுள்ளன. நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கமைய ஆலயத்திற்கு வருபவர்களிடம் விசேட சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொலிஸாரின் இந்த சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்திற்குச் செல்கின்ற பக்தர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்ற நிலையில் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் பாதுகாப்பு ஸ்கானர் இயந்திரங்களை ஆலயச் சூழலில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கமைய நல்லூர்க் கந்தனின் பத்தாம் திருவிழாவான நேற்று குறித்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன் அவை இன்று அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.