இந்தியா, இலங்கை, துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்பும் ஐ.எஸ்

breaking
  ஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, இலங்கை, துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதக் குழு காலடி எடுத்து வைத்துள்ளதாக முன்னணி ஆய்வு அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படும், முரண்பாடுகள், மோதல்களைக் கண்காணிக்கும் முன்னணி அமைப்பான Armed Conflict Location and Event Data இனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, மேற்கு ஆசியாவிற்கு வெளியே அதன் செயற்பாடுகளை கடந்த காலங்களை விட விரிவாக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் 2018 ஆம் ஆண்டில் அதன் நிலப்பரப்பை இழந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, 2019 ஆம் ஆண்டு உலகளாவிய இருப்பை விரிவாக்கியுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, அதன் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர், ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பக்தாதி, காணொளியொன்றை வெளியிட்டார். அதில் ஆசியாவின் தெற்கு, வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஐ.எஸ். குழுவின் செயற்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தார் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.