கீத் நொயார் மீதான தாக்குதல்-படை புலனாய்வு அதிகாரி கைது!

breaking
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. ஸ்ராவ் சார்ஜன்ட் சமித்த சுமித் குமார என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியே, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி, 2008 ஜூன் மாதம், ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீதான தாக்குதலுடனும் சம்பத்தப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படுபவர் என காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என இதுவரை 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரியை நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் நிறுத்திய போது, அவரை  27ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.