வந்தாறுமூலைப் படுகொலையை மறப்பரோ தமிழீழத் தமிழர்.!

breaking
தென்தமிழீழத்தின் கல்வித் பட்டறையாக விளங்கி எண்ணற்ற பட்டதாரிகளை தமிழீழத்திற்கு தந்த பல்கலைக்கழகம் வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 தமிழர்கள் ஏதிலிகளாகத் தங்கியிருந்தனர். தென் தமிழீழத்தின் பலபகுதிகளிலும் சிங்கள படைகளும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இரத்த வெறிபிடித்த புளட் மோகன் குழுவினரும் தமிழர்களை வேட்டையாட அலைந்து திரிந்தனர். பல இடங்களிலும் இவர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்த தமிழர்கள் வேடடையாடப்பட்டனர். கல்விக் கோயினான வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தினுள் தங்கினால் வேட்டை மிருகங்களிடம் இருந்து தப்பலாம் என்ற நம்பிக்கையில் உறவுகளைப்பிரிந்து உடமைகளை இழந்து உயிரை மாத்திரம் கையில் பிடித்துக் கொண்டு தஞ்சமடைந்திருந்தனர் அம்மக்கள். இவர்களை வேட்டையாடவென 1990ம் ஆண்டு புரட்டாசி 05ம் திகதி கப்டன் மொனாஸ் தலைமையில் வந்த சிறீலங்காப் படைகள் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வலைத்தன. தலையாட்டிகளோடு வந்த இராணுவத்தினர் 158 தமிழர்களை தம்மோடு கொண்டு வந்த இரு அரச பேருந்துகளில் அடைத்து வாழைச்சேனை நோக்கிக் கொண்டுசென்றனர். இதன்போது தமது உறவுகளைக் கொண்டுசெல்ல வேண்டாம் எனக் கதறிய உறவுகளிடம் அவர்களை உடனே திருப்பிக் கொண்டு வருவோம் என படைத்தரப்பால் வாக்குறுதி அளிக்கப்பட்டது. “158 தமிழ் மக்களின் கைகளை சிங்கள இராணுவம் முரட்டுத்தனமாகக் கட்டிய வேளையில் பல்கலைக்கழகக் கட்டிடத்தினுள் எழுந்த மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை” என்று கூறுகின்றார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர். கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களில் 11வயது சிறுவனொருவனும் அடங்கியிருந்தான் இவனைக்கூட விட்டு வைக்காத சிங்களப்படை 158 தமிழர்களையும் வாழைச்சேனைக்கு அருகேயுள்ள நாவலடி இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்து புதைத்தது. மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கப்டன் மொனாஸ், கப்டன் பாலித, வாழைச்சேனை இராணுவமுகாம் பொறுப்பாளர் மேஜர் மஜீத், செங்கலடி இராணுவ முகாமைச் சேர்ந்த களு ஆராய்ச்சி, மட்டக்களப்பு பிரதான முகாமைச் சேர்ந்த மேஜர் மோகான் சில்வா ஆகிய ஐவரும், இப்படுகொலைகளின் சூத்திரதாரிகள் மட்டுமல்ல, இந்தக் கொடுமையில் நேரடியாகவே பங்குபற்றியுள்ளனர் என்பதை முன்னாள் நீதிபதி பாலகிட்ணர் தலைமையிலான ஆணைக்குழுவினால் இனங்காட்டப்பட்டபோதும், இந்தக் கொடுமையாளர்கள், மாறிமாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளால் எதுவித தண்டனைக்கும் உட்படுத்தப்படவில்லை. மாறாக தமிழ் மக்களுக்கெதிராக மோசமான கொடுமைகளை புரிந்த அவர்களின் சேவைகளை பாராட்டி, சிங்கள அரசுகள் பதிவு உயர்வுகளையே வழங்கிவந்துள்ளன. பல்வேறு சர்வதேச அழுத்தங்களினால் அன்றைய பிரேமதாசா அரசு இப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென ஜே.எல்.ஏ.சொய்சா தலைமையிலான மனித உரிமைகள் பணிக்குழுவினை நியமித்தது. இக்குழு மேற்கொண்ட விசாரணையின் முடிவுகள் நீண்ட இழுத்தடிப்பிற்குப்பின்னர் 1994ல் மூன்று பக்க அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டன. இதில் 158 பொதுமக்களுக்கான நஷ்டஈடுகள் வழங்கப்படவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ஆகிய இரு சிபாரிசுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. இவற்றில் இதுவரை எதுவும் மாறிமாறிவந்த சிங்கள அரசுகளால் அமுல்படுத்தப்படவில்லை. ஆனால், தமது உறவுகள் சிங்கள இனவெறிப் படையினரால் உயிரோடும் கொன்றும் மண்ணில் புதைக்கப்பட்டத்தை தென்தமிழீழ மக்கள் மறக்கவில்லை. சிங்களப்படையின் கொடுங்கரங்களில் 158 தமிழ் மக்கள் சிக்கி மடிந்த கொடுமையின் பத்தாண்டு நினைவை, (2000ம் ஆண்டு வரையப்பட்டது மீள் பதிவாக தேசக்காற்று) 05.09.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம், நெஞ்சுகனக்க நினைவு கூர்ந்தது. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விழிப்புக்குழுவின் வேண்டுகோளின் பேரில் மாவட்டம் எங்கணும் பூரண கதவடைப்பு நடைபெற்றது. நகர பகுதிகளான மட்டுநகர், செங்கலடி, வந்தாறுமூலை, வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்தனர். வீதிகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. ஆலயங்களில் பங்குத்தந்தைகள் கொன்றொழிந்தவர்களின் நினைவாக விசேட திருப்பலியில் நிகழ்த்தப்பட்டன. இந் நினைவுகூரல் நிகழ்வுகளையும் சிங்களப் படைகள் குழப்ப முற்பட்டன. இலட்சியத்தால் ஒன்றுபட மக்களின் முன்னால் ஆக்கிரமிப்பாளனின் அடக்குமுறை முறைமைகள் ஒன்றும் செய்யமுடியாது என்பதற்கமைய சிங்களப் படைகளால் மக்களின் உணர்வு வெளிப்பாட்டை தடுத்து நிறுத்தமுடியவில்லை. இந் நினைவுகூரல்கள் வெறுமனே நினைவு நிகழ்ச்சிகள் அல்ல மாறாக தாயக விடுதலைக்காக திரண்டு நிற்கும் ஒரு தேசிய இனத்தின் உணர்வுக்கு குமுறல்கள் என்பதை சிங்களப் படைகளால் ஒருபோதும் உணர முடியாது. வெளியீடு :களத்தில் இதழ் 2000