இலங்கை துடுப்பாட்ட அணியை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல்.?

breaking
இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்வாறு பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதம அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக பிரதமர் அலுவலகம், விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபைக்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கை அணியின் பாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இலங்கை கிரிக்கட் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் செல்வதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். திமுத் கருணாரத்ன, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அகில தனன்ஜய, லசித் மாலிங்க, அஞ்செலோ மெதியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் ஆகியோரே பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். எனினும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இலங்கை அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் அணியின் தலைவராக லஹிரு திரிமான்னவும், இருபதுக்கு இருபது அணியின் தலைவராக தசுன் ஷானக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பல முக்கிய வீரர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.