அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்.!

breaking
அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…! கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்…. ……..”களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்காக எட்டுச்செளவும் முடிந்தது. இப்போது 31ம் நாள் நினைவுக்கான ஆயத்தங்கள் நடைபெர்ருக்கொண்டிருந்தன. “நிதி வீரச்சாவில்லையாம், நிதி வீரச்சாவிளையாம்.” காற்றோடு கலந்து வந்தது அந்த இனிய செய்தி. சாவீடு அங்கே சந்தொசத்த்தில் துள்ளிக்கூத்தாடியது. இரும்பொறையாய் கடற்புலிகளுக்காய் வரலாறு படைத்தவன் 1991 இல் ஆனையிறவு ஆகாய கடல் வெளிச்சமரில் மடிந்துவிட்டதாக வந்த செய்தி பொய்யாகிப்பொனது. கடல் எப்போதுமே அமைதியாக இருப்பதில்லை. அலைகள் எபோதுமே எதையோ அடைவதற்காய் துடித்துக்கொண்டேயிருக்கும். அந்த அலைகளைப் போலவே கடலுக்குள் வாழ்ந்தவனின் கதையிது. இரும்பொறை என்ற பெயரையும் அந்தப் பெயரின் இதயத்தையும் அறியாத யாரும் கடற்புலிகளில் இருந்திருக்க முடியாது. அதுபோலவே இந்தத் தேசத்தில் அந்த வீரனைப்பற்றி அறியாதவர்கள் இருக்கவும் கூடாது. ஏனென்றால் தேசம் மடியக்கூடாதென்பதற்க்காக சாவையே மறந்து , சாதனைகளையே எதிர்பார்த்து வாழ்ந்த வரலாறுகள் மறைந்து விடக்கூடாது.   எல்லோரும் அறிந்தது தமிழீழ விடுதலைப் புலிகளென்னும் தமிழர் தேசியப்படையின் கடற்படைத் துணைத்தளபதி என்ற இரும்பொறையைத்தான். ஆனால் அதற்க்கு முன்பே நிதி என்ற பெயரில் அவனுக்கொரு வரலாறு இருக்கிறது. 1990ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களொன்றில் இரும்பொறையின் தாயூரான திருகோணமலை மணியரசன் குளத்தில் பதுங்கித்தாக்குதல் ஒன்றிற்காகப் பதுங்கியிருந்த புலிகளுக்குள் இந்த முகமும் இருக்கிறது. இடுப்பிலே கைக்குண்டுடன் அல்ல, L.M.G என அழைக்கப்படும் கனரக சூட்டு ஆயுதத்தோடு தனது கண்ணிச்சமருக்காகக் காத்திருக்கிறான். சண்டை தொடங்குகிறது. L.M.G முழங்குகிறது. இராணுவ உடல்கள் வீழ்கின்றன. ஒரு நீண்ட அனுபவம் மிக்க கனரக ஆயுத வல்லுனனைப்போல அந்தத் தாக்குதலில் L.M.G யால் எதிரிக்குத் தலையிடி கொடுத்தவனுக்கு பின்னர் G.P.M.G என்னும் கனரக சூட்டு ஆயுதமே நிரந்தர ஆயுதமாகியது. இப்போதுபோல கனாக ஆயுதங்கள் ஏராளம் இருந்த காலப்பகுதியல்ல அது. குறைந்தளவு ஆயுதங்களுடன் கூடுதலான முன்முயல்வுகள். அதனால் திருகோணமலையில் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு நிதியின் G.P.M.G யும் இருக்கும். அதுபோல் திருகோணமலைப் படையணி எந்த மாவட்டத்திற்கு சண்டைக்கு சென்றாலும் அங்கும் நிதியின் துப்பாக்கியின் அதிர்வொலி கேட்கும். 1993ம் ஆண்டு பூநகரி இராணுவத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை நடவடிக்கையிலும் தனது படையணியுடன் கலமிரங்கியவன் வெற்றிகரமாய் முடிந்த அந்தச் சண்டைக்குப்பின் ஒரு கனரக சூட்டாளனாக விடுதலைப்புலிகளின் கடற்படைக்கு அறிமுகமாகிறான். வல்லரசு நாடுகளிடம் பெற்றுவிக்கும் கடற்கலங்களுக்கு நிகராக கடற்புலிகளின் பலமும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கடற்புலிகள் தயாரானபோது கடற்புலிகள் நோக்கிய இரும்பொறையின் வரவும் இருந்தது. இங்கேயும் அவனுக்கு கனரக ஆயுதப்பணியே கிடைக்கின்றது. இரும்பொறைக்கும் கனரக ஆயுதத்திற்க்குமான வாழ்வு இரத்தமும் சதையும் போன்றது. கனரக ஆயுதங்களை அவன் அணுவணுவாகத் தெரிந்து வைத்திருந்தான். அதனால்த்தான் கடற்புலிகளின் கனரக ஆயுதப்பயிற்சிக் கல்லூரி அவன் வழிநடத்தலுக்குள் கொடுக்கப்பட்டது. அதன்பின் இரும்பொறை மாஸ்ரர் , இரும்பொறை மாஸ்ரர் என போராளிகள் அவனுடனேயே இருந்தார்கள். ஒரு தாய் தன் பிள்ளையை வளர்ப்பதுபோல அந்தப்பயிற்சி ஆசிரியன் செயற்பட்டான். தன்னிடம் பயிற்சிபெறும் ஒவ்வொரு போராளியும் கனரக ஆயுதக்கையாளுகையில் வளவராக வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்ப்பட்டான். தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் தமிழர் தேசியப்படையின் கடற்படைப் பெண்போராளிகள் இன்று ஆண்களுக்குச் சமனாக நின்று ஓங்கி வீசும் அலைகளை எதிர்த்துத் தங்கள் கனரகச் சூட்டு ஆயுதத்தால் எதிரியின் கலங்களை நோக்கிச் சுடும்போது அங்கு புறப்படும் ஒவ்வொரு சன்னமும் அவன் பயிற்சி அறிந்திருக்கும். ஏனெனில் தங்களாலும் கனரக ஆயுதங்களைக் கையாளமுடியுமா என பெண்போராளிகள் சற்றுத் தயங்கிய வேளைகளில் பக்குவமாக அந்த ஆயுதங்களின் நுட்பங்களை அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து, அவர்களின் கரங்களும் கடல் நடுவே நிற்கும் படகில் உள்ள கனரக ஆயுதத்தின் விசைவில்லைத் துணிவாக அழுத்தி எதிரியின் காலங்களில் அவற்றின் சன்னங்கள் முட்டி விதிக்க வைக்க முடியும் என்ற உணர்வையும் அறிவையும் ஊட்டியவன் அவனல்லவா..? பயிற்சிகளை வழங்குவதில் அவன் எப்படி மும்முரமாய் ஈடுபட்டானோ அதேபோலவே கடலிலும் சாதனை படிக்கவேண்டும் என்ற உணர்வு அவனுக்குள் எப்போதும் இருந்தது. அந்த உணர்வுக்குச் சர்ந்தப்பமும் கிடைத்தது. அது விடுதலைப்புலிகளின் வரலாறு மீண்டும் புதிதாய் பிறப்பெடுத்த பெருஞ்சமர். ஓயாத அலைகள் ஒன்று. கடந்த காலப்படிப்பினைகளுடன் புலிகள் புதிதாய் மூட்டிய பெரும் போரின் எதிரியின் கற்பனைகளைச் சிதறடித்து அசாத்தியமான துணிச்சலுடன் எதிரியின் கடற்கலங்களுக்குச் சமனாக வளம் வந்தன கடற்புலிப் படகுகள். கடலை மட்டுமே துணையாய் நம்பி நின்ற எதிரி தரையிலும் கடலிலும் மூண்ட பெருக்ஞ்சமரின் அதிசயித்து அதிர்ச்சிக்குள்ளாகினான அதிர்வின் மீட்சிகள் எதிரிக்குக் கிடைக்குமுன் கடலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் கடற்புலிகள். கடற்கலத்தில் சமரிட்ட கடற்புலிகளின் படகொன்றின் வழினடத்துனனாக நின்று சமரிட்டான் இரும்பொறை. கடற்புலிகள் தோற்காத அந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் சிறிலங்கா வான்படையின் விமானம் வீசிய குண்டில் இரும்பொறையின் படகு தீப்பற்றி எரிகிறது. இரும்பொறை படகிற்குள் வீழ்கிறான். படகினுள் கடல்நீர் உட்புகுந்து இரும்பொறையின் உடல் சிந்திய இரத்தத்துடன் சேர்ந்து செந்நிற மாகியது. ஆனாலும் அவன் உயிர் அவனது எதிர்க்காலப் பணிக்காய் இன்னும் இழக்கப்படாமலிருந்தது. அவனது இடதுகால் இடுப்புடன் உடைந்துபோக அவன் மருத்துவ மனைக்குள் முடங்க வேண்டி வந்தது. தன் கால் பொருத்தி மீண்டும் நடமாடக்கூடியவாறு வருவதற்கு ஒரு வருடத்தையும் கடந்து அவன் காத்திருந்தான். இந்த வேதனைகளைக் கடந்தது மீண்டும் இரும்பொறை இயங்கத்தொடங்கினான். ஒரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியன் என்ற நிலையிலிருந்து அவன் மேலும் வளர்ட்சி கண்டு கடற்புலிகளின் சாள்ஸ் படையணியை வழிநடத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. எப்போதுமே போராளிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்திற்குச் சர்ந்தப்பம் கிடைத்தது. அவன் ஒரு பொறுப்பாளனாக இல்லாமல் ஒரு போராளியைப்போலவே இருந்து தனது படையை வழிநடத்தினான். தேவையான இடங்களில் கண்டிப்புகள் அதற்கேற்றவகையில் விட்டுக்கொடுப்புகள் என ஒரு வழினடத்துனனுக்குரிய எல்லா இயல்புமே அவனிடமிருந்தது. எப்போதும் எதையுமே நேரில் நின்று பார்த்துச் சீர்திருத்தி விடவேண்டும் என்பது அவனது எண்ணம். அது தளத்தில் மட்டுமல்ல காலத்திலும் தான். ஒரு முறை விநியோகப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்புலிப்படகுகள் சிங்களக் கடற்படையின் படகுகளால் வழிமறிக்கப்படுகின்றன. கடற்சமர் மூழ்கிறது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் சமரிடத்தொடங்கின. கடற்புலிப் படகொன்றிலிருந்த கனரக ஆயுதமொன்று அப்போது இயங்க மறுத்துக் கொண்டிருந்தது. கரையிலிருந்து கட்டளைகளை கிரகித்துக்கொண்டிருந்த இரும்பொறை நிலைமையைப் புரிந்து கடற்புலிப் படகொன்றில் கடற்சமர் களத்திற்கு விரைகிறான்.சண்டை நடைபெர்ருக்கொண்டிருந்த அந்தச் சூழலுக்குள் கூவிச்செல்லும் சன்னங்களுக்கும் , வெடித்துச் சிதறும் ” கனொன் ” இவைகளுக்கும் இடையில் கடலில் நிதானமாக நின்றபடி, ஆயுதத்தைச் சரிசெய்துகொண்டிருந்தான் இரும்பொறை. இப்படித்தான் எந்த சூழலுக்கும் முகம் கொடுக்கும் அவன் 07.10.1999 இல் கடலில் நடந்த சமரில் கடற்புலிகளின் துணைத் தளபதி லெப் கேணல் நிரோஜன் வீரசாவடைந்ததால் அந்தப் பணியை கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் பணிப்புடன் ஏற்றுக்கொண்டான். கனரக ஆயுதங்களில் அவனுக்கிருந்த பட்டறிவும் , கனரக ஆயுதங்களைக் கொண்டு எந்த சூழ்நிலையிலும் எதிரியை அழிக்கலாம் என்பதில் அவன் வைத்திருந்த தன்னம்பிக்கை , இருப்பதை வைத்து எதையும் சாதிக்கும் திறன் , இடைவிடா முயற்சி என விரிந்து செல்லும் அவனின் ஆற்றல்கள், எங்கள் தேசத்தின் தலைமையும், கடற்புலிகளின் சிறப்புத் தளபதியும் அவனைக் கடற்புலிகளின் துணைத் தளபதியாக்க காரணமாக அமைந்தன. அவனின் சிறப்பியல்புகளை எல்லாம் ஒன்றுசேர வெளிப்படுத்தியது திருமலைத்துறை மீதான தாக்குதல். திருகோணமலைத் துறைமுகம் ஒரு வேவுப்புலிவீரனால் வேவுபார்க்கப்பட்டு கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் கைகளுக்கு வர, அந்தத் தகவல்களோடு நேரடியாக வேவிற்கு இறங்கினான் இரும்பொறை. திருகோணமலைத் துறைமுகமே அதிரவேண்டும் என்ற உணர்வோடு பகலையும் இரவையும் ஒன்றாக்கி உழைத்தான். தாக்குதலின் ஒவ்வொரு ஆயுதங்களிலும் தானே நேரில் நின்று சரிபார்த்தான். கரும்புளிப்படகுகளையும், தாக்குதலப் படகுகளையும் ஓட்டிச் சரிசெய்தான். ஒவ்வொரு போராளிக்கும் சண்டைப்பற்றித் தெளிவூட்டினான். திருகோணமலைத் துறைமுகம் நோக்கி கடற்புலிகளின் கடற்சமர்ப் படகுகளும் கரும்புலிப்படகுகளும் நகர சமநேரத்தில் கரையில் விட்தளைப்புளிகளின் பீரங்கிப்படையின் எறிகுழல்கள் தயாராகிக்கொண்டிருந்ததன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து கடற்படையின் குகைக்குள் மூட்டப்போகும் பெருக்ஞ்சமரை வழிநடத்த களத்திலிருந்தான் இரும்பொறை. சண்டைக்கான நேரம் நெருங்க எதிரியின் துறைமுகக் கோட்டைக்குள் தன் நுட்பமான திட்டமிடலின்படி படகுகளை முன் நகர்த்தினான். ஒரு சாதகமற்ற சூழலுக்குள் சாதனைச் சிகரத்தை தொட்டுவிட எல்லோரும் மெளனமாய் காத்திருந்தார்கள். துறைமுகத்திலிருந்து ஆக்கிரமிப்புப் படைகளும் துருப்புக்காவிக் கலங்களும் அதன் துணைக் கடற்கலங்களும் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க இரும்பொறையின் தொலைத்தொடர்புக் கருவியிலிருந்து கட்டளைகள் பிறக்கிறன. கடலலையின் ஓசை அதிர்வை மேவியபடி கடற்புலிகளின் மூர்க்கமான தாக்குதல் கடலிலும், தரையிலும் ஆரம்பித்தது. விடுதபைப்புலிகளின் பீரங்கிப்படையணியின் எறிகணைக் குழல்கள் துப்பிய குண்டுகள் துறைமுகமேங்கும் விழுந்து வெடித்துக்கொண்டிருந்தன. திருகோணமலைத் துறைமுகத்தையும், சிங்களக் கடற்படையையும், சிங்கள அரசையும் கலங்கவைத்து அந்த வெற்றிகரத் தாக்குதலை தனித்து நின்று வழிநடத்தினான் இரும்பொறை. எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் எதையும் சாதிக்கும் தன் திறமையை தன் போராளிகளுடன் சேர்ந்து நிருபித்துக் காட்டினான். இப்படித்தான் செயலால் வளர்ந்து சாதனை படித்தாலும் கடற்புலிகளின் பாதுகாப்போடு பயணித்த விடுதலைப் போராளிகள் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகி மடிந்ததை இரும்பொறையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இழப்பு அவனின் நெஞ்சத்தைக் குடைந்துகொண்டிருந்தது. சிறிலங்கா கடற்படை மீது கடும் சினத்தையும் ஏற்படுத்தியது. வெறும் வேதனைகள் மட்டுமே தன் இதயத்தை அமைதியாக்கிவிடாதென்பதை உணர்ந்தவன் செயலில் இறங்கினான். திருகோணமலையிலிருந்து கடற்புலிகளை வழிநடத்திய அந்த இளம் தளபதி மீண்டும் வன்னிக்குத் திரும்பினான். கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் ஆலோசனையோடு சிறிலங்காக் கடற்படைக்கு தக்க பதிலடிகொடுக்கப் புதிய திட்டமொன்று ஹீட்டப்பட்டது. கடலில் நேரடியாக நின்று கனரக ஆயுதங்களால் சூட்டுப்பயிர்சி வழங்கி படகுகளை சரிபார்த்து எதிரிக்குப் பெரிடிகொடுக்க கடற்புலிச் சேனையின் துணைத் தளபதியுடன் போராளிகள் தயாராகினார்கள். ஒரு இராப்பொழுதில் இயற்கையும் மனிதர்களும் மெளனமாய் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மெல்லியதாய் இறைந்து கொண்டிருந்த அலைகளுக்குள் படகுகள் இறக்கப்படுகிறன. இருளின் வெளிச்சத்துக்குள் வானவிளிம்போடு பார்க்கும்போது கறுத்த உருவமாய் படகுகள் அசைந்தன. இரும்பொறை தன் கட்டளைப் படகுக்குள் இறங்கினான். படகுகளின் இயந்திரங்கள் உரத்து ஒலிக்கிறன. தரையில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி தன் தோழர்களை வழியனுப்பிவிட்டு தன் கட்டளையகத்தில் காத்திருக்க. கடற்புலிகளின் துணைத்தளபதி இரும்போரையில் வழிநடத்தலில் மூன்று தொகுதிகளாகப் பிரிந்து கடற்களச் சமருக்கு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும், கரும்புலிப்படகுகளும் புறப்படுகிறன. முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து தங்கள் இலக்கை எதிர்பார்த்து அதிவேகத்தில் அலைகளை ஊடறுத்து விரைந்தன படகுகள். இப்போது சிங்களக் கடற்படையின் கலங்களில் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தங்கள் விநியோகப் பயணத்தை ஆரம்பித்தன. கடற்புலிகளின் படகுகள் இலக்கை இனம்கண்டு மூன்று முனைகளில் எதிரிகளின் கலங்களை முற்றுகையிட்டன. கடற்சன்டையை கடற்புலிப்படகுகள் தொடக்கிவைத்தன. எதிர்பாராத நேரத்தில் தங்கள் கலங்களில் பட்டு வெடித்து சிதறும் சன்னங்களைக் கண்டு சிங்களக் கடற்படை திகைத்தது. இரும்பொறையின் கட்டளைப்படகும் அதன் துணைப்படகுகளும் எதிரியின் பாரிய கப்பலொன்றை இனம்கண்டு தாக்குதல் தொடுக்கத் தயாராகின. எதிரியின் கப்பலில் இருந்து 1200 மீற்றர் தூரத்தில் நின்றபடி கரும்புலிபடகை கப்பல்மீது மோதவிட தன் தளபதியிடம் அனுமதியைக் கோருகிறான் இரும்பொறை. எதிரி நிதானித்து தன் பலத்தை அதிகரிப்பதற்கு முன் எதிரி திகைத்திருக்கும் அந்த நேரத்தில் 1200 படையினருடன் இருந்த அந்த “பிறைட் ஒவ் சவுத்” கப்பலைச் சிதரடித்துத் தன் இதயச் சுமைகளை இறக்கி வைபதற்க்காக அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் தளபதியால் உடன் அனுமதி வழங்க முடியாதநிலை. பொதுமக்கள் அந்தக் கப்பலில் இருப்பதாக தகவல். தலைவன் எப்போதும் மக்களுக்குச் சேதம் வரக்கூடதேனச் சொல்லியது அவர் முன் சிந்தனைக் கணைகளாக வந்து மோதின. நேரம் கடந்துகொண்டிருந்தது. சிங்களக் கடற்படைகள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தபடியிருக்க, இரும்பொறை கரும்புலிப் படகுகளைத் தடுத்தபடியிருக்க, கடலில் அப்போது நிலவியது ஒரு சமருடன் கூடிய அமைதில். நேரம் கடந்ததால் எதிரியின் பலம் கடலில் இப்போது கூடியிருந்தது. எதிரியின் டோராக் கலங்களுடன் கடற்புலிப்படகுகள் கடும்சமரிட்டன. கடற்புலிகளின் ஒரு தொகுதிப் படகுகளின் தாக்குதலில் ஒரு டோரா கடலுக்குள் மூழக்டிக்கப்பட்டது. இரும்பொறை கனரக ஆயுதம் பொருத்தியிருந்த தன் கட்டளைப் படகில் நின்றபடி சண்டையை வழிநடாத்திக்கொண்டிருந்தான். சற்றுப் பின்நகர்ந்த இரும்பொறையின் கட்டளைப்படகு ஆவேசத்துடன் எதிரியின் டோறாக் கலமொன்றை இனங்கண்டு தாக்குகிறது. இப்போது டோறாப்படகு கடலில் நின்று சுழன்று கொண்டிருந்தது. இரும்பொறை கரும்புலிப் படகொன்றை அந்த டோராவைச் சிதைக்க விடைகொடுத்தனுப்பினான். அது கடலில் அலைகனூடே புகுந்து டோறாவுடன் மோதியபோதும் வெடிக்கவில்லை. நிலைமையைப் புரிந்த இரும்பொறை ஆவேசத்துடன் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் நிற்கவேண்டிய தன் கனரக ஆயுதம் பொருத்திய கட்டளைப் படகை எதிரியின் டோரா நோக்கி வேகத்துடன் முன் நகர்த்தினான். எப்போதும் போல , கடலில் ஏதாவது பிசகு நடந்துவிட்டால் அடுத்த கணம் இரும்பொறையின் படகு அங்கே நிற்கும். இலக்கு விலகிவிட்டதோ, வெடிமருந்து வெடிக்கவில்லையோ, என்ன பிசகோ….. எங்கோ நிற்க வேண்டியவன் கரும்புலிப்படகு தாக்கிய எதிரிக்கலத்தின் அருகில் நின்றான். ஏன் இதற்குள் என அருகிலிருந்த படகில் நின்ற போராளிகள் அங்கலாய்த்தார்கள் இரும்பொறையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட அவர்கள் துடித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் நிதானித்து அவனைப் பின்னகர்த்துவதற்கிடையில் ஆவேசமாய்த் தொலைத்தொடர்புக் கருவியில் ஒலித்துக் கொண்டிருந்த அவன் குரல் ஓய்ந்திருந்தது. அந்த வீரன் தன் கட்டளைப்படகிற்க்குள் இரத்தவெள்ளத்தில் மெளனமாய் கிடந்தான். ஒருறவாய் தங்களுடன் உண்டுபடுத்து ஊட்டி வளர்த்த தளபதியைக் கடலில் பறிகொடுத்த சோகத்துடன் அவனையும் இன்னும் சில தோழர்களையும் வித்துடலாய்ச் சுமந்தபடி படகுகள் கரைதிரும்பின   “எனக்கு ஒண்டு நடந்தா எங்கட கடற்புலிகலையே சிறப்பாக வழிநடத்தக்குடியவனெண்டு நான் கற்பனையெல்லாம் போட்டுவச்சிருந்தன் ஆனா அது அவன்ர சாவோட முடிஞ்சுபோச்சு” என்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி ஏங்கியது எத்தனை உண்மையானது. புறப்படும் போதே தன் இலக்கை அழிக்காமல் மீள்வதில்லை என்று புறப்பட்டவன் பின்னர் வரவேயில்லை. எந்தச்சண்டையிலும் ஏதாவது பிசகெண்டால் தன் படகுடன் அங்கே நிற்கும் ஒரு சண்டைக்கரனை நாங்கள் இழந்து போனோம். 1991 இல் நிதி என்ற பெயரின் வரலாறு முடிந்து போகாமல் இன்னும் பத்து வருடங்கள் இரும்பொறையாய்ச் சாதனைபடைத்த திருப்தி ஒருவேளை அவன் ஆத்மாவிற்கிருந்தாலும் ஒரு எதிர்கால கடற்படைத்தளபதியின் வாழ்வு இடையில் முடிந்துவிட்டதே என்ற எங்களின் நெஞ்சத்து வேதனை அவன் ஆன்மாவிற்கு எட்டுமா…?   விடுதலிப்புலிகள்    இதழ்