சென்னை மும்பை உள்பட நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என கடிதம் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ரெயில் நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அரியானா மாநிலம் ரோடக் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்த அந்த கடிதத்தில், தங்களது இயக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க முக்கிய ரெயில் நிலையங்களைத் தகர்க்கப் போவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மசூத் அகமது என்ற கையெழுத்தும் கடிதத்தில் இடப்பட்டு இருந்தது. அக்டோபர் 8 ஆம் தேதி இந்த தாக்குதல் நடத்தப்படும் எனவும் எழுதப்பட்டு இருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.