2 ஆவது நாளாகவும் தொடரும் இ.போ.ச மன்னார் ஊழியர்களின் போராட்டம்

breaking
  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மன்னார் மற்றும் மன்னாரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் இன்றைய தினம் பாடசாலை மாணவர்கள், அரச தனியார் திணைக்களங்களில் கடமையாற்றுபவர்கள், தூர இடங்களுக்குச் செல்லுபவர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். எனினும் மன்னாரிலிருந்து மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மக்கள் எவ்வித தடங்களும் இன்றி தமது போக்கு வரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்காக 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் சம்பள அதிகரிப்பு இடம் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், புதிய சம்பளமான 2500 ரூபா இந்த ஆண்டின் ஜுலை மாதத்தி லிருந்து வழங்கப்பட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படல் வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்களினால் நாடளாவிய ரீதியில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் வீதி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) 2 ஆவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.