இ.போ.ச வினர் பணிப் புறக்கணிப்பு: மன்னார் தனியார் போக்குவத்து சபையினர் விசேட சேவை

breaking
  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை (16) காலை முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட தனியார் போக்கு வரத்து சங்கம் விசேட போக்குவரத்து ஒழுங்குகளை முன்னெடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாடசாலை மாணவர்கள், அரச, தனியார் திணைக்கள பணியாளர்கள்,பொது மக்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மன்னார் தனியார் போக்கு வரத்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஷ் தலைமையிலான குழுவினர் உடனடியாக கூடி பொது மக்கள் பாதிக்காத வண்ணம் சேவை மேற்கொள்ள அவசர தீர்மானத்தை மேற்கொண்டனர். மன்னாரிலிருந்து தோட்டவெளி, கரிசல் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட கிரமங்களுக்கான சேவைகள் தற்போது, ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கோரும் இடங்களுக்கு உடனடி போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏதாவது கிராமங்களுக்குப் பயண போக்குவரத்து ஏற்பாடுகள் தேவைப்படின் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் மன்னார் தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ரீ.ரமேஷ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.