கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை - பேரினவாத பிக்கு ஞானசார தேரர்.!

breaking
வட தமிழீழம் , முல்லைத்தீவு, செம்மலையில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தை இனவாதமாக சித்தரிக்க,  சிலர் முற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டினார். மேலும் தாம் கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதற்கு, கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்கள் மத்தியில் பிழையான புரிதலை ஏற்படுத்த சிலர் முற்படுகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே முல்லைத்தீவு விவகாரம் அமைந்திருந்தது. முல்லைத்தீவு விவகாரத்தில் நாம் சம்பந்தப்படும்வரை, வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எம்மை மிகவும் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். தமிழர்கள் எம்முடன் நெருங்கியத் தொடர்புடன் இருக்கிறார்கள். எமது படங்கள் முதற்கொண்டு அவர்கள் தங்களது வீடுகளில் வைத்துள்ளார்கள். இவ்வாறு தமிழர்கள் எம்மீது மிகுந்த அன்போடு காணப்பட்ட நிலையில், ஒருசிலரது தேவைக்கு இணங்க தற்போது எமக்கெதிரான கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனையிட்டு, நாம் ஒருபோதும் கோபப்படப்போவதில்லை. தமிழர்கள் தொடர்பாக எமக்கு நன்குத் தெரியும். உண்மையில் இவர்களின் பின்னணியில் ஒருசில மதவாத குழுக்கள் இருப்பதை நாம் நன்றாக அறிவோம். மன்னார் மறைமாவட்ட முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் போன்றோர்தான் இருக்கிறார்கள். கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் கருத்துக்களையோ, இறுதி யுத்தத்தின்போது சொல்லப்பட்ட தகவலையோ இவர்கள் என்றும் கேட்பதில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்கு இணங்கவே, தமிழர்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, இது சர்வதேச ரீதியாகவும் பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளது. அத்தோடு, பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், நாட்டின் தலைவர்கள், சர்வதேசம் என அனைவருக்கும் பிழையான தகவலொன்றே இந்த விடயம் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. தங்களது அரசியல் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்காகவே, விக்னேஸ்வரன் போன்ற தரப்பினர் இவ்வாறு செயற்படுகிறார்கள்.இதற்காகவே, தமிழர்கள் மனங்களின் தேவையில்லாத விஷ விதையை விதைக்கிறார்கள். இதுதொடர்பாக ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை? இங்கு சட்டம் எமக்கு எதிராக மட்டும்தான் செயற்படுகிறது. இங்கு வடக்கு – கிழக்குக்கு ஒரு சட்டமும் ஏனைய பிரதேசங்களுக்கு ஒரு சட்டமும்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, தமிழர்களின் வாக்குகள் இல்லாது போய்விடுமோ என்று அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இல்லாது போய்விடுமோ என்றுதான் அனைவரும் அஞ்சுகிறார்கள். இந்த கீழ்த்தரமான அரசியல் கலாசாரத்தை நாம் தோற்கடிக்க வேண்டும். நாம் கோட்டாபய ராஜபக்ஷவின் பேச்சைக்கேட்டு செயற்படுவதாக கூறுகிறார்கள். கோட்டா ஒன்றும் புத்தர் இல்லை நாம் அவரது பேச்சைக் கேட்க. தமிழர்களுக்கு நாட்டில் எங்கும் வாழ முடியும் என்றால், ஏன் சிங்களவர்களுக்கு அதேபோல் வாழ முடியாது? முல்லைத்தீவு விவகாரத்தை, இத்தோடு விட்டுவிடவேண்டும். இதன் ஊடாக தமிழர்களுக்கும் எமக்கும் முரண்பாடை ஏற்படுத்த எவரும் முற்படக்கூடாது என நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.