செஞ்சோலைப் பிள்ளைகளை கைவிட்ட தமிழ்த் தலைமைகள்: மாற்று வழிக்கு முடிவு

breaking
  காணி விடயத்தில் தமிழ் தலைமைகள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால் மௌனிளாக இருந்தால் சிங்கள தலைமைகளிடம் செல்லவேண்டி ஏற்படும் என செஞ்சோலை வளாகத்தில் குடியேறியுள்ள பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை காணியில் குடியேறியுள்ள குடும்பங்கள் இன்று (திங்கட்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதன்போது தொடர்ந்து தெரிவித்த செஞ்சோலை பிள்ளைகள், “தமிழ் அரசியல் தலைமைகள் காணி விடயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்காவிடின் சிங்கள தலைமைகளிடம் செல்ல வேண்டி ஏற்படும். இந்த காணி விடயம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்கொள்கின்றோம். குறித்த காணியை உரிமைக்கோரும் சிலர் பணம் கொடுத்த பெற்றுக்கொண்டமையை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த காணியை அவர்கள் கோருகின்றனர். உண்மையில் இங்கு வளர்ந்தவர்கள் பெற்றோர், உறவினர் அற்றவர்கள். இவர்களிற்கென காணி இல்லை. இவர்கள் திருமணமாகி கணவரில் தங்கி உள்ளனர். அவர்கள் சமூக ரீதியான பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையை உணர்ந்து செயப்பட வேண்டும்” என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி- மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை காணியில், குடியேறியுள்ளவர்களை வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கடந்த 11.04.2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிரு்ததி குழு கூட்டத்தில் குறித்த காணியினை செஞ்சோலையிலிருந்து வளர்ந்து குடும்பங்களாக அங்கு குடியேறியுள்ள மக்களிற்கே பகிர்ந்தளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், குறித்த காணி தங்களுக்கு உரியதென சுமார் 16 பேர் உரிமை கோரியதுடன் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து காணி தொடர்பான ஆவணங்களைப் பரிசோதித்து குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.