தாக்குதல் நடந்து காயமடைந்தவர் இறந்த பின்பு ஆறுதலாக சந்தேக நபரை கைது செய்த பொலிசார்

breaking
வடதமிழீழம்: யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்த நபரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கிளிநொச்சி பகுதியில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் கோண்டாவில் பகுதியில் இரும்புக் கடை வைத்திருக்கும் கடை உரிமையாளரை கடையில் வைத்து இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்கியிருந்தனர். தாக்குதலுக்கு இலக்காகிய நபர் கடந்த வாரம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் பொலிஸாரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர். பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.