தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வவுனியாவில் இளைஞர் கைது

breaking
வடதமிழீழம்: வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சீருடையொன்றையும் (ரீசேட்) மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.