தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கை!

breaking

மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதா என்பதை உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையிடம் விட்டுவிடுவதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கை இருந்தால் மாத்திரமே நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஆனால், தனிப்பட்ட முறையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தமக்கு இணக்கபாடு இல்லையென்றும் அன்வர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதான முழு விசாரணையையும் நடத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் விட்டுவிட வேண்டும் என்றும் போலி நெருக்குதல் அளிக்கக் கூடாது எனவும் தெரிவித்த அவர், பொலிஸாரிடம் விசாரணை நடைமுறை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை என கூறினார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ப்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் விவகாரம் குறித்து தற்காப்பு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய வேண்டுமென முன்மொழியப்பட்ட ஆலோசனையை அன்வர் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முற்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த 12 பேரும் பொலிஸாரின் நியாயமான காரணங்களினாலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மலேசியப் பிரதமர் மஹதீர் மொஹமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.