கடலட்டைகளுடன் மூவர் கைது:

breaking
ஶ்ரீலங்கா: தனுஷ்கோடிகடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 10 இலட்சம் ரூபா மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை நேற்று வெள்ளிக்கிழமை (18) மாலை பறிமுதல் செய்த மண்டபம் வனத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட மூவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மண்டபம் வனத்துறை வனசரகர் வெங்கடேசிற்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரைக்கு அருகே புலிதேவன் நகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போது மூன்று பிளாஸ்டிக் கொல்களனில் சுமார் 150 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து வனத்துறை அதிகாரிகள் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட முருகேசன், சக்திவேல், முருகைய்யா ஆகிய மூவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளிகளை மேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மண்டபம் வனச்சரக அதிகாரி வெங்கடேஸ் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இலங்கைக்குக் கடத்த இருந்த 4 ஆயிரத்தி 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளையும் ஐந்து கடத்தல்காரர்களையும் மண்டபம் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.