நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!

breaking
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.  நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் பிரசாரத்திற்காக வந்திருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரதான கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
நாங்குநேரி தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 170 மையங்களில் 299 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் 2,23,387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக விக்கிரவாண்டி தொகுதியில் 139 இடங்களில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளில் 1,930 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.  இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது.  வாக்கு சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.