வலி.வடக்கு பிரதேசசபைில் பரபரப்பு: உறுப்பினர் மீது துப்பாக்கியை நீட்டிய  காவல்துறை

breaking
  வடதமிழீழம்: வலிவடக்கு பிரதேசசபை மாதாந்த அமர்வில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது. சபையில் போராட்டம் நடத்திய உறுப்பினர்களை அகற்ற பொலிசாரை சபைக்குள் தவிசாளர் அழைத்து, பலவந்தமாக அகற்ற முயன்றதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிசார் உறுப்பினர் ஒருவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியதாகவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வலிவடக்கு பிரதேசசபையில் நீண்டகாலமாக குழப்பம் நிலவி வருகிறது. மாவை சேனாதிராசாவின் உதவியாளரான சோ.சுகிர்தன் தவிசாளராக பதவிவகித்து வருகிறார். சபை வாகனத்தை வீட்டுத்தேவைக்கு பயன்படுத்துவது, தன்னிச்சையான தீர்மானங்கள் எடுப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை உறுப்பினர்கள் நீண்டகாலமாக சுமத்தி வருகிறார்கள். சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை தவிசாளர் கணக்கிலெடுக்காமல் செயற்படுவதாகவும் குற்றம்சுமத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்றைய அமர்விலும், கடந்த சபை அமர்வுகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தினர். டயலொக் நிறுவனத்தின் கோபுர பணியை நிறுத்துவது, கீரிமலையில் குப்பை சுத்திகரிப்புமிடம் தொடர்பாக பிரதேசமக்களிற்கு விளக்கமளிப்பது, உறுப்பினர்களிற்கு தெரியாமல் தனது ஆதரவாளர்களிற்கு மின்விளக்கு கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும்படி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென தவிசாளர் விடாப்பிடியாக நின்றார். இதனால் குழப்பம் ஏற்பட, உறுப்பினர்கள் சிலர் சபைக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்கள், ஐ.தே.க, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் சபை அமர்வு ஆரம்பித்தபோது, மீளவும் போராட்டம் இடம்பெற்றது. இதையடுத்து காவல்துறையினரின்  உதவியை நாடிய தவிசாளர், போராட்டம் நடத்தும் உறுப்பினர்களை அங்கிருந்து அகற்றும்படி கேட்டுக்கொண்டார்.சீருடை அணிந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், சிவில் உடையில் இரண்டு உத்தியோகத்தர்களும் அங்கு சென்றனர். இதையடுத்து, பிரதேசசபை மண்டபத்திற்குள் காவல்துறை  நுழைய முற்பட, உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல்துறையினருக்கும், உறுப்பினர்களிற்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை கையடக்கத் தொலைபேசியில் படம்பிடித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை தவிசாளர் பலவந்தமாக பறித்துக் கொண்டு தனது அறைக்கு சென்றுள்ளார். தவிசாளரின் அறைக்கு சென்ற உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசியை வழங்கும்படி தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், ஐ.தே.கவின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரை சுட்டுவிடுவதாக துப்பாக்கியை நீட்டியதாக உறுப்பினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உறுப்பினர்கள் அங்கு சென்று கொண்டிருப்பதாக தெரியவருகிறது.