ராஜபக்க்ஷக்களுடைய இரகசியங்களை வெளியிடுவோம்: மிரட்டல் விடுக்கும் ராஜித

breaking
ராஜபக்க்ஷக்களுடைய இரகசியங்களை மிக விரைவில் வெளியிடுவோமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவால் தாய் நாட்டை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இராணுவ வீரர்கள் ராஜபக்க்ஷக்களால் தமது சொந்த தேவைகளுக்காக கொலைகளை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோட்டாபய ராஜபக்க்ஷ தனது மோசடிகளை மறைப்பதற்காக சிலரை கொலை செய்வதற்காக இராணுவத்தினரைப் பயன்படுத்திக் கொண்டார். மேலும் இராணுவத்தினரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கொலைகள் தொடர்பாக அறிந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஜனநாயக நாடான இலங்கையில் இது போன்ற மனிதப் படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது என்றால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயார் போன்ற ஊடகவியலாளர்களது கொலை சம்பவங்களுடன் எந்தவொரு அரசியல்வாதிகளும் நேரடியாகத் தொடர்புபடவில்லை. எனினும் அந்த கொலைகளுடன் ராஜபக்க்ஷக்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இது தொடர்பில் வெகு விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.