கூட்டமைப்பிற்குள் குழப்பம்: கோவிச்சுக் கொண்டோடும் செல்வம்

breaking
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரெலோ கட்சி புறக்கணித்துள்ளது. தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றுவர் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் ரெலோ கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை, கடந்த புதன்கிழமை வவுனியாவில் கூடிய ரெலோ, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. இன்று யாழில் ரெலோவின் ஒரு பகுதியினர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் குறித்த கூட்டத்தை ரெலோ புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.