வீர வரலாறாகிப் போன கடல்மகள் லெப்.கேணல். ஜெரோமினி/விடுதலை

breaking
  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதியும், மாலதி படையணியின் தாக்குதல் தளபதியுமான லெப்.கேணல் ஜெரோமினி/விடுதலை அவர்களின் வரலாற்று நினைவுகள்...! லெப் கேணல் ஜெரோமினி/விடுதலை [தங்கராசா வினீதா] யாழ்மாவட்டம். வீரச்சாவு:- 15.11.2007 "தமிழீழ தாயகம் விடுதலை பெற்று மக்கள் சுதந்திரமாக வாழ போராடப் புறப்பட்ட புலிமகள்" வரலாறு தான் சிலரை படைக்கிறது ஆனால் சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்த வகையில் எத்தனையோ போராட்டக்களங்கள்,சவால்கள் ஏற்றத் தாழ்வுகள் கண்டு தான் ஜெரோமினி வீரவரலாற்றைப் படைத்தாள். இலங்கை இனவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடப் புறப்பட்ட இந்தப் புலிமகள் 1990 களில் அமைப்பில் இணைந்தாள். இயக்கத்தில் இணைந்த ஐெரோமினி தனது ஆரம்ப இராணுவப்பயிற்சியை மணலாற்றில் முடித்தவள் .தொடர்ந்து மேலதிக இராணுவப் பயிற்சியை கிளாலியில் உள்ள மகளிரணி பயிற்சிப் பாசறையில் முடித்த ஐெரோமினி.தொடர்ந்து தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகளையும் முடித்து மகளிர் படையணி சிறப்புத் தளபதியோடு நின்றார். தொடர்ந்து ஆகாய கடல் வெளிச் சமரில் ஏழுபேர் கொண்ட அணிக்குத் தலைவியாகச் சென்று தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து மறிப்புச் சமரில் ஈடுபட்ட ஐெரோமினி .ஒருகட்டத்தில் இவரது மிகத்திறைமையான செயற்பாட்டால் பதினைந்து பேர் கொண்ட அணிக்கு தலைவியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் கையில் விழுப்புண்ணடைகிறாள்.விழுப்புண்மாறியதும் முகாம் திரும்பியவர் சிலகால ஓய்விற்க்குப் பின் பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களிடத்தில் பாராட்டையும் பெறுகிறாள்.இந்த நேரத்தில் தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையுடன் படைத்துறைச் செயலகம் உருவாக்கப்பட்டு அக் கட்டைமைப்புக்கு போராளிகள் உள்வாங்கப்பட்டபோது ஐெரோமினியும் செல்கிறாள்.அங்கே பல்வேறு பயிற்சிகளிலும் வகுப்புக்களிலும் தனது திறமையான செயற்பாட்டால் அனைவரினதும் பாராட்டைப் பெறுகிறாள் .அந்த நேரத்தில் இவ் அணிகளில் ஒரு பகுதியினர் கடற்புலிகளுக்கு கொடுக்குமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட அங்கே திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மகளிரணிப் போராளிகளுள் ஒருத்தியாக ஐெரோமினியும் சென்றார். இங்கே கடல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக கடற்படையின் கடல்நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக கடற்கரையோர ராடர் நிலையங்கள் அமைக்கப்பட்டபோது அவ் ராடர் நிலையமொன்றில் செவ்வனவே பணியாற்றியிருந்தாள்.தொடர்ந்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலனியின் மகளீர் அணியான சுகன்யா படையணியின் ஒரு அணியைப் பொறுப்பெடுத்து பல சமர்களை செவ்வனவே அதாவது வலிந்த தாக்குதலாகிலும் சரி மறிப்புச் சமராகிலும் சரி காவலரனில் நிற்பதாகிலும் சரி ஒவ்வொரு போராளிகளையும் அவர்களுக்கேற்ற மாதிரி வளரத்தெடுத்து வழிநடாத்தியிருந்தார் தரைத்தாக்குதலில் சுகன்யா படையணியின் வெற்றிக்கு ஐெரோமினியின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறினால் அது மிகையாகாது அவ்வளவிற்க்கு அணிகளை மிகத் திறமையாகக் வைத்திருந்தாள்.அந்த நேரத்தில் நீண்ட நாளாக இவளது உள்ளக்கிடக்கையிலிருந்த கனவான தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக் கொண்டு அதற்கான படகுச் சாரதியப் பயிற்சிக்காக நளாயினி படையணிக்குச் செல்கிறாள்.அங்கே ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு தன்னை அடுத்த கட்டத்திற்க்குள் வளர்த்துக்கொள்கிறாள்.அதுமட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக ஒவ்வொரு போராளிகளையும் தனக்குத் தெரிந்த விடயங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தெடுத்தார். தொடர்ந்து சிறந்த படகோட்டியாக ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் பங்காற்றினாள். கடல் விநியோக நடவடிக்கை எவ்வளவு ஆபத்தானதும், அவசியமானதும் என்று அனைவரும் அறிந்ததே. எதிரியின் எதிர்ப்புத் தாக்குதல் முயற்சிகளை முறியடித்து விநியோக நடவடிக்கை செய்வதென்பது சாதாரண விடயமல்ல. தன்னுடைய திறமையால் எத்தனையோ தடைகளை உடைத்தெறிந்து விடுதலைக் கடமையை செவ்வனே நிறைவேற்றினாள் விடுதலை. அதுமட்டுமல்லாது கடலில் இயற்கையால் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையையும் சமாளித்து சிறப்பாகச் செயற்பட்டாள். அக்காலப்பகுதியில் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் செவ்வனவே பங்காற்றினார்.அதனைத்.தொடர்ந்து சண்டைப்படகின் தொலைத் தொடர்பாளராகவும் மூன்றாம் நிலைக் கட்டளை அதிகாரியாகவும் ( மூன்றாம் நிலைக் கட்டளை அதிகாரியென்பது ஒரு சண்டைப் படகு தன்னுடன் கூட்டிச் செல்லும் கரும்புலிப்படகை வழிநடாத்துவதாகும்.இப் பணி இலகுவானதல்ல கரும்புலிப்படகை சண்டைப்படகுடன் கூட்டிச்சென்று தாக்குதல் நடாத்தாவிட்டால் அப்படகை மறுபடியும் தளத்திற்க்கு கூட்டிவந்து சேர்ப்பதாகும்.) இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் தொடர்ந்து படகின் கட்டளை அதிகாரியாகவும் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கடற்சமர்களில் அதாவது ஆழ்கடல் விநியோகப் பாதுகாப்புச் சமர் தென் தமிழீழத்திற்கான விநியோகப் பாதுகாப்புச்சமர் மற்றும் தலைவர் அவர்களின் திட்டங்களுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல்களில் கடற்புலிகளின் துணைத் தளபதிகளான லெப் கேணல் நிறோஐன் மற்றும் லெப் கேணல் இரும்பொறை அவர்களுக்குத் துணையாக நின்று செவ்வனவே தாக்குதல்களை வழிநடாத்தினார். அக்காலப்பகுதிகளில் முகாம் பொறுப்பாளராகவும் சிறந்த ஆளுமையுடன் பணியாற்றினார் .சிறந்த கலைநயமுள்ள போராளியான ஐெரோமினி முகாம் கலைநிகழ்வுகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பரதநாட்டியத்தையும் அரங்கேற்றுவார். தொடர்ந்து கடற்புலிகளின் மகளீர் படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றாள்.அக்காலப் பகுதிகளில் மகளீரணியினை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார் .அதாவது மகளீரனி தனியாகச் எதையும் ஆண்போராளிகளுக்கு நிகராகச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக நின்று போராளிகளை அதற்கேற்றவாறு பயிற்றுவிற்றாள்.அக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாலதி படையணிக்குச் சென்று அங்கு பல்வேறு பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றி சண்டை ஆரம்பிக்கப்பட்டபோது 2ம் லெப் மாலதி படையணியின் தாக்குதல் தளபதியாக மன்னார் களமுனையில் படையினரின் முன்னேற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் முன்னனியில் நின்று அணிகளை வழிநடாத்தியதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே தரைச்சண்டை அனுபவமும் இருந்ததால் அவ் அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை அதற்கேற்றமாதிரியும் வைத்திருந்தார். இங்கேயும் முறியடிப்பு அணியொன்றை உருவாக்கி படையினரின் முன்னேற்றத்திற்கெதிரான முறியடிப்புத்தாக்குதல் நடாத்தி அதிலும் வெற்றியும் கண்டார். படை முன்னேற்றமில்லாத நாட்களில் முன்னனி நிலைகளுக்குச் சென்று ஒவ்வொரு போராளிகளுடனும் கதைத்து களநிலவரங்களை கேட்டறிந்து அதற்கேற்றவாறு செயற்பட்டார்.15.11.2007 அன்று முன்னரங்கநிலையிலிருந்த போராளிகள் தங்களது காவலரன்களுக்கிடையில் வித்தியாசமான நடமாட்டங்கள் இருப்பதாக கட்டளைமையத்திற்க்கு அறிவிக்க அணியொன்றுடன் புறப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அங்கு பதுங்கியிருந்த படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறாள்.எத்தனையோ வெற்றிகர சமர்களில் பங்குபற்றி அவ்அனுபவங்களை சகபோராளிகளுக்குச் சொல்லி அவர்களையும் திறமையான சண்டைக்காரர்களாக்கிய பெருமை ஜெரோமினியையே சாரும். ஆண்போராளிகளுக்கு நிகராக எல்லாத் துறையிலும் சாதனை செய்ய வேண்டும்மென்பதில் அதிகூடிய அக்கறை வைத்திருந்தார். சகபோராளிகளுக்கு மரியாதை கொடுப்பதில் ஜெரோமினிக்கு நிகர் ஜெரோமினியே. இக்கட்டான சமர்களில் தனது செயற்பாட்டால் அவ் இக்கட்டை தவிடுபொடியாக்கிய ஒரு வீரத்தளபதி.சகபோராளிகள் செய்யும் தவறை ஒரு தாயுனர்வோடு கண்டிக்கும் பண்பு இப்படியான ஒரு உன்னத போராளியை இழந்து விட்டோம். 15.11.2007 அன்று பதுங்கியிருந்த படையினரோடு ஏற்பட்ட நேரடி மோதலின் போது எதிர்த்துச் சமராடி தமிழ்த் தாய் மண்ணை முத்தமிட்டாள் ஜெரோமினி. தமிழீழ விடுதலைக்காய் போராடி வீரகாவியமான ஒவ்வொரு போராளிகளினதும் விசித்திரமான வரலாற்றை எழுத்தில் இலகுவில் எழுதி விபரித்து விட முடியாத விடுதலைக் காவியங்கள்.இப்படியானது தான் ஜெரோமினியின் வீரகாவிய வரலாறும் விசித்திரமானதும் அற்புதமானதுமான விடுதலைக் காவியம். எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்து விட்ட உறுதி இலட்சியமாம் தமிழீழத் தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப் போரிலே வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை இந்நாளில் நினைவிற் கொண்டு வணக்கம் செலுத்திடுவோம்.