வடகொரியாவில் வான்படை மற்றும் விமான எதிர்ப்பு படைத் தரப்பைச் சேர்ந்த வான்குடை வீரர்களின் ராணுவ பயிற்சி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. குறித்த பயிற்சி நடவடிக்கைகளை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த வாரயிறுதியில் கொரியா தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகளுக்கு இடையிலான அணுவாயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்துவதற்கு நல்லெண்ண அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி வடகொரியாவின் வான்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று வான்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த வான்குடை வீரர்களின் பயிற்சி நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது உரையாற்றிய வடகொரிய தலைவர், “வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் முன்னறிவிப்புகள் இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக ருவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “கிம் ஜோங் உன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.