ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல்: முதலுக்கு மோசம் செய்த 33 பேர்

breaking
  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகியோர் மட்டுமே 5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். எனவே ஏனைய 33 வேட்பாளர்களும் அந்த சலுகையினை இழக்க நேரிட்டுள்ளது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 3ஆம் பெரும்பான்மையினை பெற்று இருந்தபோதும் அவரால் 3.16% வீகிதத்தை மட்டுமே அடைய முடிந்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அரசியல் கட்சி சார்ந்து போட்டியிட்டால் தலா 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுயேட்சையாக போட்டியிட்டால் தலா 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 15,992,096 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் மொத்தமாக 13,387,951 வாக்குகளே போடப்பட்டன. இது 83.72% விகிதமாகும். இந்த எண்ணிக்கையில், 13,252,499 அல்லது 98.99% வாக்குகளே செல்லுபடியாகும் வாக்குகள், இதில் 135,452 அல்லது 1.01% வாக்குகள் நிராகரிக்கப்பட்டமை என்பது குறிப்பிடத்தக்கது.