ஈழத்தமிழினத்தின் மானம்உரைத்த மாவீரர்கள்! - சிவசக்தி

breaking

ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளிகளாய்....ஒளிவீசிநிற்கும் மானமாமறவரை நினைவுகூரும் நன்நாள் இந்;நாள். தங்களின் உயிர்களை எமது வாழ்விற்காக விலைகொடுத்து வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர்களுக்கான நாள் இது.  பல்லாண்டுகளாக ஈழத்தமிழ் மக்களின் விடுதலை எழுச்சி என்பது கொழுந்துவிட்டெரியும் நெருப்பாகவே வெளிப்பட்டுவருவதை இந்த உலகம் அறியும்.

இந்தவகையில் தான், நொவம்பர் 27 எங்களின் உயிர்தடவிச் செல்லும் மானமாவீரர்களின் நினைவுகளை நெஞ்சிலிருத்தித் தொழும்நாளாக ஒவ்வோர் ஆண்டும் அமைகின்றது.  தேசத்தின்விடிவு ஒன்றையே தம கனவாக்கி அதனை நனவாக்க உயிர்விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.

தமிழினத்தின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல்மாவீரனாக தன்னை அர்ப்பணித்தவன் சத்தியநாதன் என்கின்ற திருப்பெயர்கொண்ட லெப். சங்கர். தாயகமண்ணிலே சாவகச்சேரியில்  தாக்குதலில் விழுப்புண்ணுற்ற நிலையில் தமிழகத்திற்கு மருத்துவத்திற்காக அவனைத் தோழர்கள் எடுத்துவந்தனர். மருத்துவம் பயனளிக்காத வேளை தேசியத்தலைவர் அவர்களின் மடியில்தான்  சங்கர் இறுதியாக தன் உயிர்த்துளியை ஒப்புவித்தான்.  அந்நாளே தமிழீழ தேசிய மாவீரர்நாளாக தேசியத்தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. முதலாவது மாவீரர்நாள் 1989 நொவம்பர் 27 ஆம்நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

உலகம்முழுவதும் பரந்துவாழும் ஈழத்தமிழினத்தவர்க்கு தலைநிமிர்வைத் தந்துள்ளவர்கள் மாவீரர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழினம் கொண்டிருந்த வீரத்தை மீண்டும் புதுப்பித்த எம் வீரத் தலைவர் அவர்களின் வழியில் வீறுநடை போட்டவர்கள் மாவீரர்கள். தமது மக்களின் நலனுக்காக தங்களின் உடலையும் உயிரையும் கொடையாக்கி வரலாற்றில் நிலைத்தவர்கள் இவர்கள். ' களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே..' என எம் முன்னோர்கள் ஏட்டிலுரைத்த வீரத்தை கண்முன் காட்டிய வீரபுருசர்கள் இவர்கள்.

தன்னினத்தவர்களின் துயரத்தை தான்பட்ட துயராக எண்ணி அத்துயர் துடைப்பதற்காக தம்மை ஒப்புவித்தவர்கள் இவர்கள். எத்தனை படைகள்வந்து எத்தனை சூழ்ச்சிகள் செய்தபோதும் அத்தனையும் முறியடித்த அற்புதங்கள் இவர்கள்.

இவர்களை நினைந்துருகி நிற்கும் இந்நாளே உலகிற்கு தமிழினத்தவரின் ஒற்றுமையை உணர்த்தும் நாள். மதங்களின்  பேரால்> மரபுகளின் பேரால்> பல்வேறு சமுகக்காரணிகளின் பேரால் கூறாகிக் குழுவாகிக் கிடந்த தமிழர்களை தாயகவிடுதலை எனும் ஒற்றைப்புள்ளியில் இணைத்தவர்கள் மாவீரர்கள்.

வசதிகளும் வாய்ப்பகளும் கண்முன்னே வந்துநின்றபோதும்> இளமைப்பருவத்து இனிமைகள் இதயத்தில் எழுந்தபோதும் எல்லாவற்றையும் ஒறுத்து தன்னினம் வாழத் தம்மையே கொடுத்தவர்கள் மாவீரர்கள். கணப்பொழுதில் சாவு வந்தணைக்கும் என்றுதெரிந்துகொண்டும் சிரித்தபடி செருக்களம் சென்றவர்கள் இவர்கள்.

வாய்ச்சொல் வீரர்களாய் அரசியற் சதுரங்கமாடி மக்களை ஏமாற்றி> எதிரிகளுடன் கூடிக்கொண்டாடி மகிழ்ந்து> தத்தம் குடும்பங்களையும் உயர்த்திக்கொண்ட அரசியல்வாதிகள் போலல்லாது, தமது உயரிய செயல்களால் எம் உள்ளங்களில் இடம்பிடித்தவர்கள் மாவீரர்கள். தங்கள் தாயைநேசித்தவர்களான இவர்கள் தாயினும் மேலான தாயகம் என எமக்கு உரைத்துச்சென்றவர்கள். இவர்கள் தமமு நெஞ்சகங்களில் பதித்துக்கொண்டதும் வரித்துக்கொண்டதும் தமிழீழம் என்கின்ற தாரகமந்திரத்தைத்தான்.

இந்தமான மாவீரர்களின் ஈகங்கள் எண்ணற்றவை. அளவிடமுடியாக் கடலின் ஆழம்போல் இவர்களின் தாயகப்பற்றுறுதியும் அளவற்றது. இவர்களில் பலர் வெளித்தெரிந்தவர்கள். இன்னும் பலர் வெளித்தெரியாதவர்கள். வெளித்தெரியா வேர்களாக நின்று எமக்கெல்லாம் வழிகாட்டுபவர்கள். இவர்கள் பெயரைமட்டும் மறைக்கவில்லை. தமது ஒப்பற்ற தியாகத்தையும் மறைத்து, தமக்கான தடயங்கள் எதனையும் மறுத்து நிழல்வடிவில் எம்மோடு தொடர்பவர்கள்.

ஆணென்றும் பெண்ணென்றும் உடற்கூற்றியல் ஆய்வுகள் உரைத்துநிற்க> எம் ஆளுமைக்கு முன்னால்  ஆணென்ன பெண்ணென்ன என்று பொங்கியெழுந்து சாதனைபடைத்த பெண்மாவீரர்களும் இவர்களில் அடங்கியிருக்கின்றனர். கடல்> வான்> தரையென இவர்கள் காட்டிய வீரம் தனித்துவமானது. ஒவ்வொரு மாவீரர்களும் தனித்தனி வரலாறுகளாகவே மிளிர்கின்றார்கள்.

இவர்களிற் பலர் எம்;;;;;; தேசியத்தலைவர் அவர்கள் தாயகவிடுதலைப்போராட்டத்தை தொடக்கிய காலத்தில்> அவருடன் தோளோடு தோள்நின்று உற்றதுணையாக மிளிர்ந்தவர்கள். பெருந்தளபதிகளாய் விடுதலைப்போராட்ட முன்நகர்விற்கு வேகம்கொடுத்தவர்கள். இவர்கள் எமது போராட்டவரலாற்றின் அடிக்கற்களாய் எம்மினத்தவர்களால் போற்றப்படுகிறார்கள்.

காலங்காலமாக அழுதுஅரற்றிக் கிடந்த தமிழர்களின் முகங்களில் புன்னகையையும் புதுப்பொலிவையும் பிறப்பித்தவர்கள் மாவீரர்கள். ஒளியற்று இருண்டு கிடந்த தமிழர்களின் ஒவ்வொரு வாசலிலும் சூரியஒளிபாய்ச்சி வெளிச்சமிட்டவர்கள் இவர்கள். கண்ணீரோடு புலம்பிக்கொண்டிருந்த தமிழர்களின் செவிகளில் வெற்றிப்பாடல்களை ஒலிக்கவைத்தவர்கள் இவர்கள். கூந்தலைவரித்து துக்கம் கொண்டாடிய பெண்களுக்கு புதுவீரம் காட்டியவர்கள் இவர்கள்.

தமிழர்தாயக விடுதலைப் போராட்டப்பாதை என்பது சரிவுகளையும் சாதனைகளையும் கொண்டது. மிகவும் கரடுமுரடானது. நீண்டகாலமாக தமிழ்மக்களின் விடுதலையுணர்வை நசுக்கிவிட பேரினவாத சக்திகளும், அவற்றுடன் கைகோர்த்து இயங்கும் சக்திகளும் பெருமுயற்சி செய்கின்றன.எனினும் தமிழர்கள் மனங்களில் நிலைத்துநின்று விடுதலைப் பெரும்பயணத்தை நடத்திச் செல்பவர்கள் மாவீரர்கள். இவர்கள் தான் எமது இனத்தின் வரலாற்றுச் சக்கரத்தை உருட்டிச் செல்பவர்கள். ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் புயலாக நின்று வீசிக்கொண்டிருப்பவர்கள். இன்றும் என்றும் எமது விடுதலைப்பேருணர்வு தேய்ந்தழிந்து போகாமல் காத்துநிற்பவர்களும் இம்மாவீரர்களே.

உலகின் எந்தப்போர்வல்லுநர்களாலும் ஆய்ந்தறியமுடியாத போர்முறைகளையும் உத்திகளையும் பயன்படுத்தி எமது இனம் வெற்றி பெற்றுவந்தது. உயிர்களை விதைத்து எமது மாவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றிகளைப் பொறுக்கமுடியாது, பொதுப்போர் விதிமுறைகளைக்கூடப் புறந்தள்ளி விட்டு எமக்கெதிரான போரைமுன்னெடுத்தது பேரினவாதம்.

வழுவியநெறியில் நின்று நந்திக்கடலில் எம்மினத்தை நசுக்கி தாம் வெற்றிபெற்றதாக கொக்கரித்தது பேரினவாதம். நாங்கள் எமது சுதந்திரவாழ்வுக்காக அறவழியில் போரைமுன்னிறுத்திய தேசியத்தலைவனின் பக்கபலமானவர்கள். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தனித்துவமான அடையாளங்களுடன் வாழும் இனத்தவர்கள். எம்முடைய அரசியற் பொருளாதார வலுவுடன் நாங்கள் சுதந்திரமான வாழ்வை வாழ விரும்புகிறோம் என்பதுதான் மாவீரர்கள் உலகிற்கு உரைத்துச்சென்ற செய்தியாகும்.

ஆனால் இன்றும் கூட ஈழத்தமிழர்களாகிய நாங்கள் வரலாற்றில் மிகத்தொன்மையான இனம் என்பதை பேரினவாதம் ஏற்றகமறுத்து நிற்கின்றது. தமிழினத்தவர்கள் தனித்துவமானவர்கள் என்பதையும் அடிப்படை உரிமைகளுடன் சுதந்திரமான வாழ்வை வாழவே தமிழர்கள் விருப்புற்றுள்ளார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ பேரினவாதம் எண்ணவில்லை.

இன்றும்கூட ஒற்றையாட்சியையும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை நிலைநாட்டுவதையுமே அவர்கள் தமது எண்ணங்களாக வெளிப்படுத்தியும் செயற்படுத்தியும் வருகிறார்கள். இலங்கைத்தீவு பேரினத்தின் சொத்தென்ற மாயை இன்னமும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. தமிழர்கள் விரும்பினால் ஒற்றையாட்சிக்குள் வாழலாம். இல்லையேல் இலங்கைத்தீவை விட்டு வெளியேறலாம் என்கின்ற கருத்துகளே விதைக்கப்பட்டு வருகின்றன.

போர்முடிவுற்று இலங்கைத்தீவில் அமைதிநிலவுவதாக ஆட்சியாளர்கள் காண்பிக்கின்றபோதிலும்> எம்மக்கள் எமதுமண்ணில் இயல்புவாழ்வை வாழமுடியாதவர்களாகவே இன்றைக்கும் உள்ளனர். முன்னெப்போதும் இல்லாதவகையில் எமது நிலம் பேரினவாதத்தினால் விழுங்கப்பட்டுவருகிறது. மீள்குடியேற்றம் என்றபெயரில் எம்நிலத்தில் இனக்கலப்பு நடைபெறுகிறது. அபிவிருத்தி என்றபெயரில் எமது இனத்தின் அடையாளச்சின்னங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன.

காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்னநடந்தது என்பதை இதுவரை பேரினவாதிகள் வெளிப்படுத்தவில்லை. இன்றும் உறவுகளைக் காணாது கண்ணீருடனும் தாங்கமுடியாத் துயரத்துடனும் குடும்பத்தினர் கலங்கிநிற்கின்றனர். அரசியற் கைதிகளாய் சிறைகளில் அடைக்கப்பட்டு, விடுதலையின்றி நாளுக்குநாள் உயிர் உருகிக்கிடக்கும் உறவுகளின் விடுதலைக்கும் வழிகாணவில்லை. போரின் வலிசுமந்து வாழ்வை நகர்த்தமுடியாது தவிக்கும் மக்களுக்கும் எதுவித முன்னேற்றத் திட்டங்களும் இல்லை.

இதனைநாம் உய்த்துணர்ந்துகொள்ள வேண்டும். எமது மண்; எங்கள் இனத்துக்கே உரியது என்பதை இந்த உலகிற்கு எடுத்துரைத்துச் சென்றிருக்கின்றார்கள் எம் மாவீரர்கள். எமது மாவீரர்களின் கனவான தாய்மண்விடுதலையைப் பெற்றெடுக்கவேண்டிய பாதையில் பல்வேறு புதர்களும் புற்களும் மண்டிக்கிடக்கின்றன.   இந்நிலையில்தான் ஒன்றுபட்டு மாவீரர்களை நினைவுகூரும் நாளாக இன்றையநாள் அமைகின்றது. எமது தேசியத்தலைவர் அவர்கள் குறிப்பிட்டதுபோல சுதந்திரத்தில் பற்றுக்கொண்ட உறுதிகொண்ட  மக்களாக ஒன்றுதிரண்டு நின்றால் எந்தவொரு  சக்தியாலும் அம்மை அசைக்கவோ அழிக்கவோ முடியாது. எனவே தான் உலகின் எந்தமூலையில் வாழ்ந்தாலும் ஈழத்தமிழர் என்கின்ற ஒற்றைப்புள்ளியில் ஒன்றிணைந்து நிற்கவேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

உயிர்தரும் வேளையில் மாவீரர்கள் உச்சரித்தது தாயக விடுதலைக் கனவு என்கின்ற இலட்சியத்தைத் தான். நாங்கள் யாருக்காக எம்முயிரை அர்ப்பணித்துச் செல்கின்றோமோ அவர்கள் எமது இலட்சியக்கனவை முன்னெடுத்து எம் தாயகத்தை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் மாவீர்கள் மண்மடியில் விதையானார்கள். மாவீரர்களை நாங்கள் புதைக்கவில்லை. எம்மண்ணில் விதைத்திருக்கின்றோம்.

கடந்த பல ஆண்டுகளில் மாவீரர்களின் துயிலுமில்லங்கள் பேரினவாதசக்திகளால் துடைத்தழிக்கப்ட்டுள்ளன. அவர்களை நினைவுகூருவதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. ஆனால், காற்றிலும்> கடலிலும்> வானிலும் நிறைந்துநின்று எம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்றார்கள்  எம்மாவீர்;கள். தேசத்தின் விடுதலையை வேண்டிநின்ற அவர்கள் தமக்கான ஆறடிநிலம்கூடக் கேட்டதில்லை.

இத்தகைய உன்னதமாவீரர்கள் எங்களுடைய உறவுகளே. எங்களுடைய உடன்பிறப்புகளே. எனவே> இன்றைய சூழ்நிலையில் எத்தனை இடர்ப்பாடுகளை நாம் எதிர்கொண்டாலும் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவேண்டிய கடப்பாடுடையவர்களாக நாம் இருக்கின்றோம். எமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி ஒன்றாகி குரல்தர வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். விடுதலைக்கான பணி என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் உரிய தலையாய கடமையாகவே உள்ளது.

நான்பெரிது நீபெரிதென்ற தன்நலத்தை விட்டெறிந்தவர்களாக எமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்கும் உன்னதமனிதர்களாக நாம் ஒன்றிணைவோம்.

-    தாரகம் இணையத்திற்க்காக  - சிவசக்தி -