மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்

breaking

தமிழீழ பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் தனிமையாக உணர்ந்ததாகவும், இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகவும், இதுதவிர அவர் பூரண மனநலத்துடன் இருந்ததாகவும் அவரது தாயார் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டார்.

Sale-இலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

வருண்ராஜின் இறுதிநிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை Sale-இல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.